24 மணிநேர அபாய தொலைபேசி அழைப்பு
24 மணி நேர அபயம் தொலைபேசி அழைப்பு சேவை இன்று (15) முதல் நடைமுறைக்கு வருகின்றது. இத் 0710712345 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தும் போது எப்போதும் ஒரு வைத்தியர் அழைப்பை ஏற்றுக் கொள்வார். அத்துடன் அழைப்பை ஏற்படுத்துபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி தொடக்கம் அபயம் தொலைபேசி சேவையானது நடைமுறைக்கு வருகின்றது. நமது பகுதிகளில் தற்கொலை செய்பவர்களின் வீதமும் தற்கொலை முயற்சிப்பவர்களின் வீதமும் நாட்டின் சராசரி நிலையோடு ஒப்பிடுகையில் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக சில பாடசாலை மாணவர்கள் சில பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்களாக பலர் விரக்தி நிலை ஏற்படுகின்றபோது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பல்வேறு காரணங்களினால் விரக்தி நிலை ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்படுகின்றது. அச்சமயத்தில் குறிப்பிட்ட நபர்கள் அல்லது அவர்களுடன் நெருக்கமாக உள்ளவர்கள் இந்த சேவையை
பெறுவதற்காக தொடர்பினை ஏற்படுத்த முடியும். மேலும், எந்தவொரு நபரும் தனக்கு ஏதாவதொரு மனநெருக்கீடு ஏற்படும் போது உதவியை பெறுவது சம்பந்தமாக ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்கும் தொடர்பு கொள்ளலாம். குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்துகின்றபோது எந்த நேரம் ஆயினும் மருத்துவ அதிகாரி ஒருவர் உடன் பதில் அளித்து உரிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு செய்ய வேண்டிய விடயங்களையும் தெளிவாக குறிப்பிடுவர். தொடர்பை ஏற்படுத்தும் அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படமாட்டாது.