வவுனியாவில் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி
வவுனியாவில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வவுனியா முடக்கப்படுமா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் சற்று முன்னரே இத் தொற்றாளர்கள் தொடர்பான விபரம் தெரிந்தமையால் வவுனியா முடக்குவது தொடர்பான தீர்மானம் கலந்துரையாடலின் பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பட்டாணிச்சூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் வவுனியா நகரத்தில் பல்வேறு வியாபார செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள். இவர்களில் 204 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களின் மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர் பகுதியூடாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.