இருபத்து மூன்று வயதுவரை முன்மூளை விருத்தி பூரணப்படாது. தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்
இருபத்து மூன்று வயதுவரை முன்மூளை விருத்தி பூரணப்படாது.
தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
இருபத்து மூன்று வயதுவரை சரியாகத் தீர்மானமெடுப்பதில் செல்வாக்குச் செலுத்தும் முன்மூளையின் பகுதிகள் முற்றாக விருத்தியடைந்து முடியாதிருப்பதால் தனித்துத் தீர்மானமெடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம் . எனவே பெற்றோர் ஆசிரியர்களது உதவியையும் பெறுவது சிறந்தது என பூநகரி மேற்பார்வைப் பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
முழங்காவில் டொன்பொஸ்கோ தொழில் நுட்ப நிறுவனத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கான வாழ்க்கைத்திறன் மற்றும் வளர் இளம்பருவ சுகநலம் தொடர்பான கருத்தமர்வில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
வளரிளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கு ஈடாக உளவளர்ச்சி இருக்காது. வேகமான செயலூக்கம் இருக்கின்ற போதிலும் விவேகமாகக் கையாள வேண்டிய விடயங்களை தனித்து எடுக்கும் தீர்மானங்கள் பிழைக்கப்பண்ணி விடுகின்றன. எனவே இக்காலப்பகுதியில் எம்முள் வாழ்க்கைத் திறன்களையும் வளரிளம்பருவ மாற்றங்கள் மற்றும் சுகநல விடயங்கள் தொடர்பான அறிவினையும் வளர்த்துக் கொள்வதோடு முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியரது துணையை நாட வேண்டும்.
ஆண்களினதும் பெண்களினதும் வளரிளம்பருவ மாறுதல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து இருபாலாரும் தெரிந்திருத்தல் வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளும் நட்பு ரீதியிலான நல்லுறவை பேணும் போது பிள்ளைகள் வழிதவறிப் போவதற்கான வாய்ப்புகள் அற்றுப் போகும் என்றார்.
இக்கருத்தமர்வில் பூநகரி,ஜெயபுரம்,முளங்காவில் பகுதிகளிலிருந்துவரும் எழுபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.