வடமராட்சியில் கிணற்றுக்குள் விழுந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு
கிணற்றுக்கட்டில் விளையாடிய 24 வயதுடைய இரு இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சற்று முன்னதாக வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது 24), மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்த போது, ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற அடுத்த இளைஞரும் கிணற்றில் குதித்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த ஏனைய இளைஞர்களால் ஊரவர்களை உதவிக்காக அழைத்து கிணற்றில் இருந்தவர்களை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் பற்றி பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.