Mon. May 6th, 2024

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இராணுவத்தால் உடைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது

நேற்று மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது.

இந்த நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .

நினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றி செல்லப்பட்டுள்ளதோடு பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளது.

இரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும், இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

உடைக்கப்பட்டுள்ள நினைவு தூபியை சூழ இராணுவ சப்பாத்து அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்