Sun. May 5th, 2024

பெப்பரவரி 26 – சுகயீன லீவு போராட்டம் ; வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்! -ஜோசப் ஸ்ராலின் –

பெப்பரவரி 26 ஆம் திகதி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சுகயீன லீவினை அறிவித்து – ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் நீக்க வலியுறுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் – ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து – அனைத்து அதிபர் ஆசிரியர்களும் – சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஆசிரியர் அதிபர் சேவைக்கு B.C.பெரேரா சம்பள ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்ட 23 வருடங்களாக இருக்கும் சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் வேலை நிறுத்தங்களின் பலனாக – கடந்த அரசங்கத்தின் அமைச்சரவைக் குழு 2019 ஒக்டோபர் 1 ஆம் திகதி ஆசிரியர், அதிபர் சேவைகளை அகப்படுத்தப்பட்ட சேவையாக மாற்றி <CLOSED service) புதிய சம்பளப் பரிமாணங்கள் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது.
தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பிரயோகித்த அழுத்தங்களின் விளைவாக புதிய சம்பளத் திட்டத்தை அழுல்படுத்தும் வரை – இடைக்கால சம்பள யோசனை ஒன்றை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டதுடன் அதற்காக 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவையில் முடிவு எடுக்க வேண்டியதாக இருந்தது. அத்துடன் இடைக்கால சம்பளத்தைக் கொடுப்பதற்கான சுற்றறிக்கையை வடிவமைக்கும் வேலையை சம்பள ஆணைக்குழுவுக்கு பொறுப்பளிக்கப்பட்டது.
ஆசிரியர், அதிபர்கள் பல தசாப்த காலமாக நசுக்கப்பட்டு வரும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சு எடுத்த தீர்மானம் – தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி தேர்தலின் வாக்குறுதியாகவும் மாறியது.
இந்த அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கி அதை ஏற்றுக் கொண்டதால் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் பொறுப்பில் இருந்து தற்போதைய அரசால் விலக முடியாது.
2019 டிசம்பர் 17 ஆம் திகதி தற்போதைய கல்வி அமைச்சர் ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினை தொடர்பாக எமது தொழிற்சங்கங்களுடன் உரையாடி – 2020.01.21 திகதி அன்று மீண்டும் கலந்துரையாடல் நடந்தாலும் – உரிய பதில் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் எமது சங்கங்கள் 2020.02.03 முன் உரிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும் – அதை வெளியிடாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக எழுத்து மூலம் அறிவித்தோம்.
ஆனால் எமது கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் கொடுக்காதபடியால் 2020.02.14 திகதி தொழிற்சங்கங்கள் பல இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் அருகில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தி மீண்டும் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம்.
தற்போதைய அரசு இந்த செயற்பாட்டிற்கும் உரிய பதில் கொடுக்கத் தவறியபடியால் – நாம் எல்லோரும் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை – ‘சுகயீன லீவு’ அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு போக தீர்மானித்துள்ளோம்.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் – ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து – அனைத்து அதிபர் ஆசிரியர்களும் – சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.
இதேவேளை – காலை 9.30 மணிக்கு இசறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் – சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி – தொழிற்சங்கங்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்