பருத்தித்துறை – மருதங்கேணி வீதியை விரைவாக புனரமைத்து தருமாறு பல தரப்பினரும் வேண்டுகோள்
வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை – மருதங்கேணி வீதியை விரைவாக புனரமைத்து தருமாறு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் நி.நரேந்திரன் உட்பட பொதுமக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி வீதி அதிகாரசபை பொறுப்பதிகாரிக்கு வைத்தியரினால் நேற்று முன்தினம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் பருத்தித்துறை – மருதங்கேணி பிரதான வீதியின் பல்வேறு பகுதிகள் சேதமுற்றுக் காணப்படுவதனால் மருதங்கேணி வைத்தியசாலையிலிருந்து பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு அவசிய தேவைப்பாடுடைய நோயாளர்களை விரைவாக நோயாளர் காவு வண்டியில் (Ambulance) கொண்டு செல்லமுடியாத நிலைமை காணப்படுகிறது. இதனால் நோயாளர்கள் அசௌகரியமான நிலைமைக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே தயவு செய்து குறித்த பிரதான வீதியினை புனரமைத்துத்தருமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதனால் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தமது அன்றாட செயற்பாடுகளை செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கவனமெடுக்குமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.