இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் , 4 பேர் இன்னமும் மருத்துவமனையில்
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் (ஐ.டி.எச்) அனுமதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் குணமடைந்து வருவதாகவும், ஆரம்ப அறிக்கைகளின் படி அவர்களுக்கு அந்த வைரஸ் தாக்கம் இல்லை என்று தெரியவருவதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீரா தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் (ஐ.டி.எச்) இரண்டு சீனர்கள் உட்பட நான்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையை சேர்ந்த ஆண் மற்றும் ஒரு பெண் மற்றும் இரண்டு சீன பெண்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
அவர்கள் இந்த வைரஸ் தொடர்பான கடுமையான அறிகுறிகளைக் காட்டவில்லை என்றும் , ஆனால் அவை கண்காணிக்கப்படுகின்றன என்று டாக்டர் சமரவீரா கூறினார்.
“நாங்கள் அவர்கள் மீது சோதனைகளை நடத்தி வருகிறோம். வுஹான் நகரத்திலிருந்து அவர்கள் திரும்பி வந்ததால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், என்று ”டாக்டர் சமரவீரா கூறினார்.
ஆனால் அறிக்கைகள் உறுதியாகக் கிடைக்கும் வரை அவை கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று எங்களால் சரியாகச் சொல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.
“மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (எம்ஆர்ஐ) அனுப்பப்பட்டுள்ளன, மேலும் இரண்டு நாட்களுக்குள் அறிக்கைகள் பெறப்படும்,” என்று அவர் கூறினார்.
சீன நகரமான வுஹானில் முதன்முதலில் பதிவான கொரோனா வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரான்ஸ், நேபாளம், தாய்லாந்து, ஜப்பான், வட கொரியா, தைவான், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது.
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது மற்றும் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,975 ஆக உயர்ந்துள்ளது