இருபாலையில் சிறுமியை கடத்தி வன்புணர்வு செய்த இருவரை அடையாளம் காட்டிய சிறுமியின் நண்பர்
இருபாலையில் கடந்த மாதம் 15ஆம் திகதி 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாட்சியான சிறுமியின் நண்பரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோப்பாய் இருபாலையில் உள்ள ஒழுங்கை ஒன்றில் தனது நண்பருடன் கதைத்துக்கொண்டு நின்று 14 வயதுச் சிறுமி, அந்த வழியால் வந்த இருவரால் மிரட்டப்பட்டு கடத்திச்சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்
மதுபோதையில் இருந்த அந்த நபர்கள் இருவரும் சிறுமியின் நண்பரைத் தாக்கியுள்ளதுடன் அவர்களில் ஒருவர் சிறுமியை அச்சுறுத்தி தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளார். மற்றையவர் சிறுமியின் நண்பரை மிரட்டி தடுத்து வைத்திருந்துள்ளார்.
சிறுமியை ஒதுக்குப் புறம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றவர் சிறுமை சித்திரவதை செய்து மிரட்டி வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார். வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த 23ஆம் திகதி முறைப்பாடு வழங்கியுள்ளனர். சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 26ஆம் திகதி முற்படுத்தப்பட்ட பின்னர் இன்று அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இந்நிலையில் சாட்சியான சிறுமியின் நண்பர் அவர்களை அடையாளம் கண்டுள்ளார்