அலெக்சன், டிவிசனின் கோல்களினால் இறுதியாட்டத்தில் இமையாணன் மத்தி அணி
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான உதைபந்தாட்டப் போட்டியில் இமையாணன் மத்தி அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதியாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இமையாணன் மத்தி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது அரையிறுதியாட்டத்தில் இமையாணன் மத்தி அணியை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இமையாணன் மத்தி அணி வீரர் அலெக்சன் இரட்டைக் கோல்களைப் போட 2:0 என்ற கோல் கணக்கில் இமையாணன் மத்தி அணி முன்னிலை வகித்தனர். இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியினர் பல தடவைகள் முயற்சித்த போதும் கோல் எதனையும் போட முடியவில்லை. ஆனால் இமையாணன் மத்தி அணியின் வீரர் டிவிசன் ஒரு கோலைப் போட ஆட்ட நேர முடிவில் இமையாணன் மத்தி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.