சம ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர்கள் தவறுகின்றனர் – வலயக் கல்வி பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன்
சம ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர்கள் தவறுகின்றனர் என வலிகாம வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Northern sports college பொங்கலினை முன்னிட்டு நடாத்திய கலாச்சார விளையாட்டு விழாவுக்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளைகளை பெற்றோர்கள் தவறான முறையில் வளர்க்கிறார்கள். கல்வி என்பது கட்டாயமானது அதற்காக படி படி என தினமும் நேரகாலம் இல்லாது ஒரு பாடத்திற்கே நான்கு ஐந்து ஆசிரியர்களை வைத்து மேலதிக வகுப்புக்களை நடத்துகிறார்கள்.
பிள்ளைகளுக்கான ஒய்வு நேரம் போதுமான அளவு விடுவதில்லை, சுயமாக கற்பதற்க்கு நேரம் கொடுப்பதில்லை, சிந்திப்பதற்கு அவகாசமில்லை. இது சமஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க உதவ மாட்டாது.மாறாக சமூக சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ முடியாதவர்களாகவும், ஆற்றல் அற்றவர்களாகவும் தலைமை ஏற்க முடியாதவர்களாகவும் உருவாகவே வழிவகுக்கும். எனவே பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடசெய்வதுடன் பெற்றோரும் தம்மை கலாச்சார விளையாட்டுகளில் ஈடுபடுத்தி தமது மனவழுத்தத்தை குறைத்து கொள்ளவேண்டும். பிள்ளைகளுக்கு இவ்வாறான நிகழ்வுகள் பிறழ்வான நடத்தைகளில் இருந்தும் பாதுகாக்கும் எனக் கூறியதுடன் பிள்ளைகளை சகல துறைகளிலும் பிரகாசிக்க செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.