வெளிநாட்டில் இருந்து வரும் வாக்குப் பெட்டிகள்!! -நீளமான வாக்குச்சீட்டும் தயார் என்கிறார் தேசபிரிய-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக இம்முறை தயாரிக்கப்படவுள்ள வாக்குச் சீட்டானது வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தேர்தல் விதிமுறைகளை மீறும் சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்கு 0112 868 212 அல்லது 0112 868 214 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் 35 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியிருந்த ஷமல் ராஜபக்ஷ, குமார வெல்கம உள்ளிட்ட ஆறு பேர் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தாக்கல் செய்யப்பட்ட 2 வேட்புமனுக்களுக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளுக்கமைவாக இந்த வேட்பு மனுதாக்கல் இடம்பெற்றிருந்தமையால் இவற்றுக்கு எதிரான ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றார்.