Fri. May 3rd, 2024

வடமாகாண கால்பந்தாட்டத்தில் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி மகுடம் சூட்டியது.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் நேற்று இமையாணன் அ.த.க. பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி மோதியது.
முதல்பாதியாட்டத்தில் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் முதல் பாதியாட்டம் கோல் எதனை பெறாமல் நிறைவடைந்தது. இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளுக்குமான போராட்டம் தொடர்ந்தது. இரு அணிகளுக்கும் கோல்வாய்ப்புகள் கிடைத்த போதிலும் பின்கள வீரர்கள்,  கோல் காப்பாளர்களினால் கோல் போடும் வாய்ப்புக்கள் நழுவ விடப்பட்டன. இருப்பினும் ஆட்டம் முடிவடைய 8 நிமிடங்கள் இருக்கும் நிலையில், இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி வீரர் மலரவனால் அடிக்கப்பட்ட பந்தை யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி வீரர் தடுக்க முயன்ற போது, அவரின் காலில் பட்டு கோலாக மாறியது. அதன் பின்னர் இரு அணிகளும் பலமுறை முயற்சித்த போதிலும் கோல் எதனையும் பெற முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி  1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்