மன்னார் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்
மன்னர் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் ஏற்பாட்டில் நானாட்டான், முசலி , மன்னார் பிரதேசச் செயலாளர்கள் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் ‘கொரோனா’ அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வறுமையில் உள்ள சுமார் 500 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக மன்னார் நகர் பிரதேச செயளாலர் ஆ.பிரதீப் பங்கு பற்றுதலுடம் மன்னர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ரெஜினா ராமலிங்கம் மற்றும் பொருளாளர் பத்திநாதன் குரூஸ் தலைமையில் மன்னார் சாவற்கட்டு மற்றும் சௌத்பார் பகுதியில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1500 ரூபாய் பெறுமதியான அரிசி , பருப்பு, மா, சீனி தேயிலை, கிழங்கு, வெங்காயம், உள்ளடங்களான பொருட்கள் மேற்படி சௌத்பார் மற்றும் சவற்கட்டு கிராம சேவகர்கள் சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் மூலமாக மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குறித்த நிறுவனத்தின் ஊடாக மடு பகுதியைச் சேர்ந்த தேக்கம் , விளாத்திக்குளம் , பெரிய பண்டிவிரிச்சான் , சிறிய பண்டிவிருச்சான் , காக்கையன்குளம் பெரிய முரிப்பு பகுதியை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு 1750 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றற்றல் உடைய சிறுவர்களுக்கான பாடசாலையில் கற்கும் 87 பிள்ளைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களும் மேற்படி நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.