Fri. May 3rd, 2024

போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டம்

கிராம மட்டத்திலான போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டம் தொடர்பான செயலமர்வு நேற்று நடைபெற்றது

கிராமமட்டங்களில் சிகரட்,மதுசாரம் உட்பட ஏனைய போதைவஸ்துக்கு செலவாகும் தொகையை குறைத்து தற்பேதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மக்களை வலுப்படுத்துதல் தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று  (23) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிராம மட்டத்திலான போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்தின் முக்கியத்துவம், நிலைபேறான செயற்திட்டத்தின் முக்கியத்துவம், கிராம மட்டங்களில் ஆரம்ப மதிப்பீடுகள் மேற்கொள்வதற்கான நுட்பங்கள், வழிமுறைகள், கிராம அபிவிருத்தியில் போதைப்பொருள் பாவனையின் ஆதிக்கம், கிராமிய தகவல்களை திரட்டிக்கொள்ளல், ஆரம்ப கட்ட செயற்பாட்டினை திட்டமிடல் என்பன தொடர்பாக குறித்த செயலமர்வு இடம்பெற்றது.

மேலும், இச்செயலமர்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுவதோடு பல சவால்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தடுப்புமுயற்சிகளில் ஈடுபடவேண்டியுள்ளது. அத்தோடு சமூகமட்டத்தில் இதன் தாக்கம் அதனை எவ்வாறு வெற்றி கொள்வது போதைப்பொருள் பாவனைக்குள்ளானவர்களை அதிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உளமாற்றத்தை ஏற்படுத்தல், அவர்களை சமூகமட்டத்தில் குடும்பம் மற்றும் சமூகத்தோடு இணைத்தல் தொடர்பாக எடுத்துக்கூறினார். மேலும் தனி மனித முயற்சியினால் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டியதுடன் அனைவரும் இணைந்தே போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த முடியுமென தெரிவித்தார்.

இச்செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் போதைப்பொருள் பாவனையால் எதிர்நோக்கும் சவால்கள், போதைப்பொருள் பாவனை சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது, சட்ட ஏற்பாட்டில் உள்ள குறைபாடுகள், மற்றும் பயிற்சியின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பற்றி எடுத்துக்கூறினார்.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர்திருமதி .எஸ்.சி.என்.கமலராஜன், ADlC நிறுவன பிரதிநிதிகள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுக்சபை மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போதைவஸ்து தடுப்பு, கல்வி, மற்றும் சிகிச்சை குழுவில் உள்ள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்