பரபரப்பான ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி சம்பியன்
கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் வடமராட்சி மற்றும் பருத்தித்துறை லீக் அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரில் பலத்த போராட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று குறித்த கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் பல நிமிடங்கள் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி வீரர் சஞ்சீவ் ஒரு கோலைப் போட 1:0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியாட்டம் நிறைவு பெற்றது.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடாத்தினர். 8வது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் வர்மன் சிறப்பான கோலைப் பதிவு செய்து பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. அதன் பின்னர் இரு அணிகளும் பலமுறை முயற்சித்த போதும் மேலதிக கோலைப் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
இதில் சிறந்த கோல் காப்பாளர் றேஞ்சஸ் அணி வீரர் கீர்த்தனன்
சிறந்த ஆட்ட நாயகனாக றேஞ்சஸ் அணி வீரர் வர்மன்
தொடர் ஆட்ட நாயகனாக நவஜீவன்ஸ் அணி வீரர் கெளதமன்
வளர்ந்து வரும் வீரராக இமையாணன் மத்தி அலெக்ஸ்
சிறந்த நன்நடத்தை வீரராக கொலின்ஸ் அணி வீரர் வனஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டார்