Mon. Apr 29th, 2024

கொரோனா அற்ற யாழ்ப்பாண மாவட்டம், இராணுவ தளபதி நம்பிக்கை

கொரோனா அற்ற யாழ்ப்பாண மாவட்டம் வெகுவிரைவில் மலரும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

இவர் தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு   விடுத்த விசேட வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்து உள்ளவை வருமாறு…

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் வழிகாட்டலில் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா அற்ற தாய் நாட்டை உருவாக்குகின்ற பாரிய பணியில் இலங்கை இராணுவம் இதய சுத்தியுடன் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனாவை வெகுவிரைவில் வெற்றி கொள்ள முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றோம் என்று சொன்னால் மிகை ஆகாது.

கொரோனாவை இலங்கை தேசத்தில் இருந்து இயலுமான விரைவில் முழுமையாக ஒழித்து கட்டுவதற்கு பொதுமக்கள் அனைவரினதும் உதவி, ஒத்தாசை அத்தியாவசியமானதாக உள்ளது. அதன்படி மக்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்பு குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.

இதே வகையிலான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க வேண்டும், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும், சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும், வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட மக்களை இம்மாவட்டத்தின் கட்டளை தளபதி என்கிற வகையில் கோரி நிற்கின்றேன்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனா அற்ற யாழ்ப்பாண மாவட்டத்தை வெகுவிரைவில் உருவாக்குவோம் என்கிற மகிழ்ச்சியான செய்தியையும் இத்தருணத்தில் உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்