உதைபந்தாட்ட அக்கடமிகளின் உருவாக்கம் மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் – ப.தர்மகுமாரன்
உதைபந்தாட்ட அக்கடமிகளின் உருவாக்கம் மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும் நாகரீகமுடையவர்களாகவும் உருவாக வழியமைத்து கொடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கடிமிகளுக்கான கலந்துரையாடல் தலைவர் கு.பகீரதன் தலைமையில் நடைபெற்றது. அக் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உதைபந்தாட்டமானது வடக்கில் வளர்ச்சி கண்டபோதும் முழுமையடையவில்லை. அதற்குக் காரணம் உதைபந்தாட்டம் என்றால் முரண்பாடுகள், சண்டைகள், பார்வையாளர்கள் நாகரீகமற்றவர்கள் என்ற தோற்றப்பாடு பெற்றோர் மத்தியில் நிலைத்துள்ளது. இதனை இல்லாது செய்வதற்கு அக்கடமிகளின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டாயமானது. அதற்கு அக்கடமிகள் கட்டுக்கோப்பான நிர்வாக அமைப்பும் பொறுப்புக்கூறுகின்ற தன்மையும் காணப்படுவதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் உடல் உள செயல்பாடுகளில் அக்கறை கொள்ளவேண்டும். தமிழினத்தை பொறுத்தவரையில் ஆரம்பம் நன்றாக இருக்கும் பின்னர் பிசுபிசுத்து போகின்ற தன்மையே காணப்படுகின்றது. அவ்வாறான நிலைஇல்லாது அக்கடமிகள் அனைத்தும் (இதுவரையில் 23 உருவாகியுள்ளது) ஒற்றுமையாக மாணவர்களின் உதைபந்தாட்ட வளர்ச்சி நோக்கியதாக இருக்க வேண்டும். இங்கு பயிற்றுனர்கள், பயிற்றுனருக்கான தகுதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வைத்தியரின் ஆலோசனையை பெறல், கல்வித் திணைக்களத்தின் அங்கீகாரத்தைப் பெறல் மற்றும் தென்னிலங்கை அக்கடமிகளுடன் போட்டிகளை நடாத்துதல் போன்ற செயல்பாட்டை முன்னகர்த்தி முன்னேற்றம் காண அனைவரும் ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேட்டுள்ளார்.