இராணுவத்தின் திடீர் சோதணை சாவடிகள் விவகாரம்!! -ஓமந்தை சென்ற டக்ளஸ் குழு-
இராணுவத்தின் திடீர் சோதணை நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுந்து வாக்குவாதத்தை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குழுவினர் ஓமந்தையில் உள்ள இராணுவ சோதணை சாவடிக்கு நேரடியாக சென்று ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
ஈபிடிபி கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் கு.திலீபன், கட்சியின் ஓமந்தை பிரதேச அமைப்பாளர் ச.வாகீசன் உள்ளடங்கலான குழுவொன்று ஓமந்தை சோதனைச் சாவடிக்கு விஜயம் செய்திருந்தது.
இதன் போது அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சரின் குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன்போது கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் தெரிவிக்கையில்,
இராணுவத்துடன் உரையாடிய போது நாங்கள் பேரூந்தை நிறுத்தி பொதிகளை சோதனை செய்கிறோம். பல தடவை போதை பொருட்கள் பிடிபடுகின்றது.
அதனை கொண்டு வருபவர்களையும் பொலிசாரின் உதவியோடு கண்டு பிடிக்கிறோம். பெண்கள் கொண்டுவரும் பொதிகளை பெண் இராணுவத்தினரே சோதனை செய்கின்றனர். பொலிசாரும் உடன் இருக்கின்றனர்.
விரைவாக சோதனை செய்துவிட்டு பேரூந்திலே ஏற்றி விடுகிறோம். பேரூந்தை சோதணை சாவடியில் இருந்து நீண்ட தூரத்தில் நிறுத்துவது கூட இல்லை.
போதை பொருள் பயன்பாட்டையும், கடத்தலையும் தடுப்பதற்கே இந்நடவடிக்கை. இது நீண்ட காலத்திற்கு இல்லை என இராணுவத்தினர் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.