அதிபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தற்போது வெளியான 2021ம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண பரீட்சையில் மாணவர்களை 85%ற்கு மேல் சித்தியடைய வைத்த அதிபர்களை கெளரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாணத்தைச் சேர்ந்த 80 அதிபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களை 85%ற்கு மேல் சித்தியடைய வைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அவர்களின் தனிப்பட்ட கோவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த சான்றிதழை நேர்முகப் பரீட்சையொன்றில் சமர்ப்பிக்கப்படும் போது புள்ளிகளை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.