2020-2023 சனி பெயர்ச்சி பலன் -ரிஷபம்
வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது.
நல்ல காலம் பிறந்தாச்சு
ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாராளமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். பெண்களுக்கு இதுநாள் வரை இருந்த உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். இதுநாள்வரை தடைபட்டு வந்த திருமணம் கை கூடி வரும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வரப்போகிறது. வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்குவீர்கள். ஒன்பதாம் இடத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை சனி பகவான் பார்வையிடுகிறார். இதனால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுநாள்வரை பட்ட துயரங்கள் தீரப்போகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் குடும்பத்துடன் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும் இனி வரும் காலமெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசந்த காலமே.