ஸ்ரீலங்கா சுமித்ரயோ அமைப்பால் தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு
தற்போது யாழ் மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்கும் நோக்கோடு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்திலும் 3.45 மணியளவில் பருத்தித்துறை பஸ் தரிப்பு நிலையங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கைகொடுக்கும் ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையினரால் இந்த விழிப்புணர்வு நடைபெற்றது.
மனிதவளம் அரியவளம் அதை பாதியில் பறிக்காதீர்கள் , மனம் விட்டு பேசினால் மனப் பாரம் குறையும் என்ற வாசகங்கள் குறிப்பிட்டு இந்த பேரணி நடைபெற்றது.
இதில் துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.
அத்துண்டுப் பிரசுரத்தில் தற்கொலை தடுக்கப்படக்கூடியவை.
தற்கொலை பற்றிய செய்தி கேட்டு மனம் கலங்காதவர்கள் எவரும் இல்லை. சக மனிதர் ஒருவர் தன் வாழ்கையை தானாகவே முடித்துக் கொள்வதென்பது அவரது குடும்பத்தினரும் நண்பர்களுக்கும் மட்டுமன்றி அவரைத் தெரியாதவர்களுக்கும் கூட அதிர்ச்சியை தரக் கூடியதாகும்.
தற்கொலை முயற்சியில் தோல்வி அடைந்தவர்களில் பலர் அத்தோல்வியை நினைத்துப் பின்னர் மகிழ்கின்றனர். என்ற விடயங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
மனம் விட்டு பேசினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். எமது காரியாலயம் யாழ்ப்பாணம் 175, நாவர் வீதியில் அமைந்துள்ளது. காலை 9 மணி தொடக்கம் மதியம் ஒரு மணிவரைக்கும் காரியாலயத்தில் சந்திக்க முடியும். அத்துடன் 0779008776 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ள முடியும். எம்முடன் தொட்பு கொள்வோர் தற்கொலை நாட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நியதி அல்ல. மனதில் துயரம் உள்ள எவரும் எம்முடன் நேரிலோ , தொலைபேசி மூலமோ பேசலாம் எனக் கூறினார்.