வல்லிபுரகோயிலில் இளைஞர்கள் அட்டகாசம், 6 பேர் காயத்துடன் வைத்தியசாலையில்
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் திருவிழாவில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றில் படுகாயங்களுக்கு உள்ளான 6 இளைஞர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை(05) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான துன்னாலை வடக்கைச் சேர்ந்த தர்மராசா கவிதன்
(வயது- 19) மனோகரன் கார்த்தீபன் (வயது -27) சிவசங்கர் சாரங்கன் (வயது -19) தேவேந்திரம் அகிலன் (வயது -19) சண்முகலிங்கம் யேசுதன் (வயது -19) செல்வகுமார் ரஞ்சித்குமார் (வயது -18) ஆகிய 6 இளைஞர்களும் இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் எட்டாம் திருவிழாவான நேற்று சனிக்கிழமை(05) இரவு சுவாமி வெளிவீதி உலா சுற்றிவந்து இருப்பிடத்துக்கு சென்றதைத் தொடர்ந்து ஆலயத்தின் வெளி வீதி பகுதியில் இளைஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு அது அடிதடியில் முடிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதில் கற்கள், கொட்டன்கள், பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த தலைக் கவசங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி அதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.