Sat. May 11th, 2024

யாழ்.ஊரெழு இளைஞர்களால் கசிப்பு குகை முற்றுகை – பெருந்தொகை கசிப்பு மீட்பு இளைஞர்களின் பாராட்டத்தக்க செயல்

யாழ்ப்பாணம் ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகை ஒன்று இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களும் ஒரு தொகுதி கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஊரெழு கிராமத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்பு குழுவொன்று கோப்பாய் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் சின்னத்துரை முகுந்தன் தலைமையிலான குழுவினர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊரெழு கிராமத்தில் அதிரடியாக சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது கைவிடப்பட்ட தோட்டம் ஒன்றில் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களும் தென்னைமரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கசிப்பும் சிவில் பாதுகாப்பு குழுவால் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்திப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.

மேலும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்