Sat. May 11th, 2024

பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்கள்

வடமராட்சிப் பகுதியில் உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்களை ஒழுங்கு செய்வதனால் மாணவர்களின் வருகை பாடசாலையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடமராட்சி பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களிலேயே குறித்த வகுப்புகள் நடாத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் உயர்தர பரீட்சையை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சை சில காரணங்களால் பிற்போடப்படலாம். எனினும் தற்போது உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு 5ம் தவணை பாடசாலைகளில் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களை பாடசாலைக்குச் செல்லாமல் தனியார் கல்வி நிலையங்களுக்கு வருகை தருமாறு வற்புறுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதனைவிட யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமைகளில் தமது சொந்த விடுப்பை (லீவு) எடுத்து தனியார் வகுப்புக்குச் செல்வதாகவும் தெரிய வந்துள்ளது. யாழ் நகர்ப்புற பகுதிகளில் இவ்வாறான வகுப்புக்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் வடமராட்சி பகுதியில் பல பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர். சிலர் இதற்கு மேலாக தம்மிடம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மேலதிகமாக பணம் தந்து கல்வி கற்க முற்பட்ட போதிலும் அதை மறுத்து இலவச கல்வியை மேற்கொள்வது பாராட்டப்பட வேண்டியது. இவ்வாறாக கல்வியை விலைபேசாது செயற்படும் வடமராட்சி ஆசிரியர்கள் மத்தியில் தனியார் கல்வி அதிகார கலாசாரத்தை புகுத்தாதீர்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்பு வைப்பது தொடர்பாக கரவெட்டி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்