ஜனாதிபதி மாலைதீவிற்கு தப்பியோட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை இராணுவ விமானம் ஒன்றில் நாட்டை விட்டுத் தப்பியோடி மாலைதீவு சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கோட்டாபயவுக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அவர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
மாலைத்தீவின் தலைநகரில் உள்ளூர் நேரப்படி சுமார் 03:00 மணிக்கு (22:00 GMT) அவர் பயணித்த இராணுவ விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் பிறிதொரு இடத்துக்கு கோட்டாபய சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ச இன்று ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையிலேயே உத்தியோகபூா்வ பதவி விலகல் அறிவிப்புக்கு முன் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் பல தசாப்தங்களாக இலங்கையை ஆண்ட ஒரு குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருகிறது. கடந்த சனிக்கிழமையன்று கோட்டாபய ராஜபக்ச இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து அவர் தலைமறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அமெரிக்கா செல்ல கோட்டாபய முயன்ற நிலையில் அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது. அத்துடன், இந்தியாவில் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது தெரிந்ததே.