சகல மாகாணங்களிலும் உதைபந்தாட்ட வளர்ச்சி நடைபெறும்- இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தெரிவிப்பு
9 மாகாணங்களிலும் சம காலத்தில் உதைபந்தாட்ட வளங்கள், புனரமைப்புகள் நடைபெறும் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட நடப்பு வருடத்திற்கான நிர்வாகிகளை கெளரவிக்கும் நிகழ்வு கடந்த 7ம், 8ம் திகதிகளில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நடப்பு வருட தலைவர் ஜஸ்வர் உமர், பொது செயலாளர் உபாலி ஹேவகே, உப தலைவர் இ.ஆர்னோல்ட், நிர்வாக பிரதி பொது செயலாளர் தி.வரதராசன், பொருளாளர் செல்லர், உப பொருளாளர் அ.நாகராஜன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வுகள் வடபகுதியின் வவுனியா, முல்லைத்தீவு, பூநகரி, யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றது.
அவர் மேலும் உரையாற்றுகையில்
ஸ்ரீலங்காவின் 9 மாகாணங்களிலும் சமகாலத்தில் மைதான புனரமைப்பு கட்டுமான வேலைகள், பயிற்சிகள், சுற்றுப்போட்டிகள், மத்தியஸ்தர் அபிவிருத்தி, லீக்குகளின் நிதிப் பங்களிப்பு, வளப்பங்கீடு போன்றன வெகு விரைவில் சம காலத்தில் ஆரம்பிக்கப்படும் என்பதையும் நீங்களே இத்திட்டங்களின் கண்காணிப்பாளர்களாக இருப்பீர்கள் என்றும் கூறினார். அத்துடன் வடபகுதியின் அதிகப்படியான வாக்குகளே என்னை வெற்றி பெற செய்தது என்றும் இப்பிரம்மாண்டமான வரவேற்புகளை வழங்கிய லீக்குகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
நடப்பாண்டு நிர்வாகிகளால்
உதைபந்தாட்ட லீக்குகளின் கழக நிர்வாகிகளையும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகள், மாகாண உடற்கல்வி பணிப்பாளர், அதிபர்கள் ஆசிரியர்கள், மற்றும் விசேடமாக மீள் குடியேற்றத்தை ஏற்படுத்தி வரும் பிரதேச செயலர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், யாழ் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஊடாகவியலாளர்களையும் சந்தித்து எதிர்கால கிராமத்தை நோக்கிய உதைபந்தாட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.