அரசியலில் குதிக்கும் தீர்மானம் இல்லை!! -அம்பிகா சற்குணநாதன்-
அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி அவர் ஆணையாளர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன.
இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாகவே தீர்மானித்திருந்ததாக கூறியுள்ளார்.
அதற்கமைய தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதியே ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசியல் கட்சி ஒன்றினால் தன்னை எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.