Fri. Apr 26th, 2024

கொரோனா பாதிரியாரின் மறுபக்கம்

சுவிஸ் நாட்டின் எஸ்.ஆர்.எவ் என்ற தேசிய தொலைக்காட்சி கடந்த வாரம் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஜேர்மன் மொழியிலான இத்தொலைக்காட்சி சுவிஸ் மக்களிடையே பிரபல்யம் வாய்ந்ததாகும்.
அச்செய்தியில் சுவிஸில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்ற தமிழர் ஒருவர் செய்த மோசடிகள் தொடர்பான ஆதரங்கள் வெளியானது,அந்தத் தமிழருடைய பெயர் சற்குணராசா சிவராசா.

சுவிட்சலாந்தின் தலைநகர் பேர்னில், முனுசிங்கன் என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையில் சாதாரண வேலையாளாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். திடீரென்று தனது பெயரை டாக்டர் போல் என்று மாற்றிவைத்துக்கொண்டு, கிறிஸ்வ தேவாலயம் ஒன்றை சொந்தமாக வாங்கியதுடன், பல கோடி ருபாய் பெறுமதியான சொத்துக்கு சொந்தக்காரராக மாறியிருந்தார்.

பிலதெல்பியா மிசனறிசபை என்ற பெயரில் பேர்ன்; நகரின் மையப்பகுதியில், பாராளுமன்றத்திற்கு பின்பாக உள்ள சுல்கல் வீதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் 5000 சுவிஸ் பிராங்ஸ் மாதாந்த சம்பளம் பெறுவதாக சுவிஸ் அரசாங்கத்திடம் கணக்கு காட்டிவரும், டாக்டர் போல் என்று தன்னை அழைத்துக்கொள்கின்ற சற்குணராசா சிவராசாவிடம் இருக்கும் அசையா சொத்துக்களின் பெறுமதி 130 கோடி என்று கூறப்படுகின்றது.

இது எப்படி நடந்தது? எங்கிருந்து இவ்வளவு பெருந்தொகையான சொத்து வந்தது? இதுதான் சுவிஸ் ஊடகமான எஸ்.ஆர்.எவ் தொலைக்காட்சி எழுப்பியிருந்த கேள்வியாகும்.

சுவிசைப் பொறுத்தவரை கணவன், மனைவி, மூன்று பிள்ளைகளுடன் வாழும் ஒரு குடும்பத்தின் சராசரிச் செலவு 5000 பிராங்குகள் ஆகும். அப்படியிருக்க எப்படி இவரால் 130 கோடி ரூபாய்க்குச் சொத்துச் சேர்க்க முடிந்தது.
சுவிஸில் பேர்ன் பாராளுமன்றத்திற்கு பின்னால் 60 கோடி பெறுமதியாக கட்டிடம், போல் என்ற இடத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்ற மிகவும் பிரமாண்டமான மூன்று மாடி மாளிகை (படம் இணைக்கப்பட்டுள்ளது),

யாழ்ப்பாணம் அரியாலை 724 கண்டி வீதியில் உள்ள 20 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம், அதன் அருகில் உள்ள மூன்று சொகுசு பங்களாக்கள், வயல் மற்றும் பனங்; காணிகள் என்று ஏராளமான சொத்துக்களை எப்படி இவரால் ஒரு குறுகிய காலத்திற்குள் சம்பாதிக்க முடிந்தது என அத்தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது பற்றிய தேடல்களை மேற்கொண்ட போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுமார் ஆயிரம் அங்கத்தவர்களை கொண்டுள்ள இவர் நடாத்தும் தேவாலயத்தில் அனைத்து அங்கத்துவர்களும் அவர்களது மொத்த வருமானத்தில் 10 வீதத்தை டாக்டர் போலுக்கு கண்டிப்பாத் தரவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு கட்டளையாக இருக்கின்றது. அப்படித் தராவிட்டால் உங்களுக்கு கடவுள் எதையுமே தரமாட்டார், தேவாலயத்துக்குக் கொடுக்காவிட்டால் ஏழ்மையை அடைந்துவிடுவீர்கள், ஆசீர்வாதங்கள் இல்லாமல் போய்விடும் என்று ஒரு வகையிலான அச்சுறுத்தலை விடுத்தே, பண வசூலை அவர் நடாத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பைபிளில் இப்படித்தான் சொல்லி இருக்கிறது என்று கூறி, உணர்வு ரீதியிலான அச்சுறுத்தலை விடுத்தே அவர் பண அறவீடு செய்வதாக, அவரது ஆலயத்தில் அங்கத்துவர்களாக இருந்த சிலர் தெரிவிக்கின்றார்கள். உங்கள் சம்பளத்தில் 10வீதம் கடவுளுக்குரிய காசு, அதனை தேவாயலத்திற்கு தரவில்லை என்றால் உங்களை கடவுள் தண்டிப்பார் என்ற அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் இத்தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதில் மிகவும் மேசமான விடயம் என்னவென்றால், மக்கள் மத்தியில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்ட போதிலும், அதற்கான பற்றுச் சீட்டு எதையுமே அவர் வழங்குவது இல்லை. உங்களுக்கான பதிலை கடவுள் வழங்குவார் என்று கூறி, கொடுக்கல் வாங்கலை முடித்துவிடுவார் என அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இவரது பேச்சுக்களினால் உணர்ச்சிவசப்பட்டு தாலிக்கொடி உட்பட நகைகளை காணிக்கையாகச் செலுத்திய பலர் இவரது ஆலயத்தில் இருக்கின்றார்கள்.

சுவிட்சர்லாந்திற்கு புதிதாக வருபவர்களை சில காலம் முகாம்களில் வைத்திருப்பார்கள். அக்காலத்தில் முகாம் வாசல்களில் சிலர் நிற்பார்கள். வெளியில் வருபவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து சில உதவிகளையும் செய்வார்கள். முகாம்களில் இருக்கும் மக்களுக்கு இது பெரும் நிறைவாக இருக்கும். இதன் பின்னர் உதவி செய்த அந்நபர்கள் தங்களுடன் தேவாலயத்திற்கு வருமாறு அழைத்து சென்று மதம் மாற்றிக் கொள்வார்கள். இந்த தேவாலயத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் சுமார் ஆயிரம் குடும்பங்களில் 99வீதமானவர்கள் சைவசமயத்தை சேர்ந்தவர்களாகும்.

சுவிட்சர்லாந்தில் இப்படி பல தேவாலயங்களை தமிழர்கள் தொடங்கி உள்ளனர். இது பெரும் இலாபம் தரும் தொழிலாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் இவர் சொத்து வாங்கி, அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுகின்ற பொழுது, உடனடியாகவே ஒரு தேவாலயம் கட்டுவதற்காகவே தான் பணம் சேகரிப்பதான ஒரு பிம்பத்தை உருவாக்க இதுபோன்ற காரியத்தை கச்சிதமாகச் செய்து வருவது இவரது பாணியாக இருக்கின்றது.

சுவிட்சலாந்தில் உள்ள பீல் என்ற இடத்தில் இவர் வீடு கட்டிய பொழுது, பேர்னில் தேவாலயம் ஒன்று இவரால் கட்டப்பட்டுக்கொண்டு இருந்தது.
யாழ்ப்பாணத்தில் மூன்று சொகுசு மாளிகைகளை இவர் கட்டிக்கொண்டு இருந்த அதேநேரத்தில், அரியாலையில் இவர் தேவாலயம் ஒன்றைக் கட்டிக்கொண்டு இருந்தார்.

தற்பொழுது போல் என்ற இடத்தில் ஒரு மூன்றுமாடி சொகுசு பங்களாவை இவர் கட்டிக்கொண்டு இருக்கின்ற செய்தி ஆதாரத்துடன் சுவிஸ் தேசிய தொலைக்காட்சியில் வெளியானதும், அதனை மறைப்பதற்கு அல்லது அதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்கு, செய்தி வெளியான மறு தினமே சர்வதேச பாடசாலை தொடர்பான போலிப் படம் ஒன்றை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றார்.

கிறிஸ்தவ ஆலயம் என்ற பெயரில் இவர் மேற்கொண்டு வருகின்ற செயல்கள் தொடர்பான மேலும் சில குற்றச்சாட்டுக்கள் இவரது ஆலய உறுப்பினர்களாலேயே தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

வருடாந்த கணக்கு வழக்குகள் இவர் வெளியிடுவதே இல்லை. எவ்வளவு நிதி அறவிடப்படுகின்றது, எவ்வளவு நிதி செலவு செய்யப்படுகின்றது என்ற விபரங்களை இவர் எப்போதும் வெளியிடுவது இல்லை.
இவரது உதவி பாதிரிகளாக இவரது நெருங்கிய உறவினர்களையே வைத்துக்கொண்டு தனது பிழைகளை மறைத்து வருகின்றார்
சிறிலங்கா இராணுவத்தில் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் இவரது அண்ணன் மகன் தான், யாழ்குடாவில் உள்ள தேவாலயங்களுக்கு பொறுப்பாகச் செயற்பட்டு வருகின்றார். மிரட்டல்கள், அடாவடித்தனங்கள் எல்லாம் சிறிலங்கா இராணுவத்தைக் கொண்டு அங்கு தாராளமாக செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இவர் தேவாலய கணக்குவழக்குகளை வெளியிடாதது தொடர்பாக இவருடன் முரண்பட்டுக்கொண்டு பலர் இவரின் மிசனரியை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள்.
தமிழ் நாட்டில் இவரது தேவாலயத்திற்கு பொறுப்பாளராக இருந்த அன்பழகன் என்ற பாதிரியாருடன் பிரச்சனை ஏற்பட்ட பொழுது, அங்கு செயற்படும் பாதாள உலக கும்பலை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இவருடைய பிழைகளை தட்டிக்கேட்ட மற்றொரு பாதிரியான பாஸ்டர் சங்கர் என்பவரின் வாகனம் இரண்டு தடவைகள் அடியாட்களால் தாக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் சமய நிறுவனங்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை, ஆனால் வரவு செலவு மற்றும் அவர்களின் பொதுப்பணிகள் அதற்கான செலவு விபரங்களை அரசாங்கத்திற்கு காட்ட வேண்டும். ஆனால் இந்த விபரங்கள் எதுவும் அரசாங்கத்திற்கு காட்டப்படுவதில்லை என எஸ்.ஆர்.எவ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு தெரியாமல் சொத்து சேர்த்திருப்பது பற்றி அத்தொலைக்காட்சி மாகாண அதிகாரிகளை தொடர்பு கேட்டிருந்தது. இது சட்டப்படி குற்றம், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்த அதிகாரிகள் பதிலளித்திருக்கிறார்கள்.

இலங்கையில் இவரின் சொத்துவிபரங்கள், மற்றும் இவர்களின் மத நடவடிக்கைகள் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதற்காக அத்தொலைக்காட்சி குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு சென்று ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

சுவிட்சர்லாந்திலும் இலங்கையிலும் ஒரு மாதகாலம் இந்த விபரங்களை திரட்டுவதில் அத்தொலைக்காட்சி குழு செலவிட்டிருந்தது.
சுவிட்சர்லாந்தில் இந்த தேவாலயத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக செவ்வி கண்டிருந்தார்கள். தாங்கள் மாதாந்த கொடுப்பனவை வழங்காததால் தமக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் அவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இலங்கையில் இவருக்கு இருக்கும் சொத்துக்களை வாங்குவதற்கு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பபட்டதா என ஆராய்ந்த அத்தொலைக்காட்சி குழுவினர் சட்டரீதியாக பணம் அனுப்பபடவில்லை என கண்டறிந்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்