கரணவாய் பகுதியில் மினி சூறாவளி வீடுகள் சேதம்
வடமராட்சி கரணவாய் பகுதியில் சற்று முன்னர் மினி சூறாவளி ஏற்பட்டதன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது பெய்துவரும் மழையின் மத்தியில் கிராம அலுவலகர்கள் சேத விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
கிடைக்கப் பெற்ற விபரங்களில் கரணவாய் தெற்கு ஜெ/348 கிராம அலுவலகர் பிரிவில் வீடொன்றின் கூரை வீழ்ந்துள்ளது. குறித்த கிராம அலுவலகர் பிரிவில் மணியகாரன் தோட்டம் பகுதியில் வசிக்கும் மாணிக்கம் நாகநாதன் என்பவரின் முன்னாள் வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தினர் புதிதாக வீடு அமைக்கப்பட்டு அதில் வசித்ததால் எவருக்கும் காயமேற்படவில்லை. மோட்டார் சையிக்கிள் மற்றும் உடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் குமரிதோட்டம் பகுதியில் 5 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும், மற்றும் கரணவாய் மகா வித்தியாலய கூரையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன் கரணவாய் மத்தி ஜெ/350 கிராம அலுவலகர் பிரிவில் பலா மரங்கள், வாழை போன்ற மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், மூத்த விநாயகர் சந்தையில் உள்ள கடை ஒன்றின் தகரத்திலான கூரை சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.