கிராமப்புற மாணவர்களின் கல்வி கானல் நீராகுமா?
பாடசாலை நாட்களை குறைக்க வேண்டாம் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச அலுவலங்கள் இயங்கும் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி, சுகாதாரம் என்பன அடங்க மாட்டாது என அறிவிக்கப்பட்ட போதிலும், ஆசிரிய சங்கங்கள் சில பாடசாலை நாட்களை குறைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகின்றது.
இந்நிலையிலேயே பெற்றோர் பாடசாலை நாட்களை குறைக்க வேண்டாம் என வேண்டுகோளை விடுத்துள்ளனர். நகர்புற மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கல்வியை தொடர்கின்றனர். ஆனால் கிராமப்புற பாடசாலை மாணவர்கள் பலர் பாடசாலைக் கல்வியை மாத்திரமே நம்பி இருக்கின்றனர். எதை இழந்தாலும் மீளப் பெற்றுக் கொள்ள முடியும். குறித்த காலப்பகுதியில் கல்வியை இழந்தால் மாணவர்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி விடும். கொரோனா தொற்று காரணமாக இழந்த கல்வியை மேலும் பெறுவதற்கு பலதரப்பினரும் போராடி வரும் நிலையில், பாடசாலை நாட்களை குறைப்பது மாணவர்களின் கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெறுவதற்கு சரியான பொறிமுறையை ஏற்படுத்துவதனூடாக இவ் இடையூறுகளை தவிர்த்துக் கொள்ள முடியும். வைத்திய சேவையை போன்றே ஆசிரிய சேவையும் உன்னதமான பணி. இதில் இலாப நோக்கத்தை கருத்தில் கொள்ளாது ஆசிரியர்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆசிரியர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு வலயக் கல்வி பணிப்பாளர்கள் மாவட்ட செயலருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு சரியான பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். இவை தவறும் பட்சத்தில் ஏழை மாணவர்கள் தொடர்ந்தும் கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தி சமூக ஏற்றத் தாழ்விற்கும் வழிகோலும்.