Sat. Jun 1st, 2024

மின்தகன சாலையை அமைக்க பலரும் முன்வர வேண்டும்- ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு

வடமாகாணத்தில் மின்தகன சாலைகளை அமைப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று  ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டுமாயின் மின் தகன சாலையிலேயே தகனம் செய்ய முடியும். வடமாகாணத்தை பொறுத்தவரை யாழ் மாநகர சபையிலும், வவுனியா நகர சபையிலும் என இரண்டு மின்தகன சாலைகள் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றில் ஒரு நாளைக்கு ஆகக்கூடியது 11 சடலங்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். ஆனால் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியின் பின்னர் இறப்புக்களில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் மின் தகனத்திற்காக சடலங்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. செப்ரெம்பர் மாதம் 3ம் திகதிய நிலவரப்படி 54 உடலங்கள் மின் தகனத்திற்காக வடமாகாணத்தில் தேங்கியிருந்தன. இந்த சடலங்களை உரிய சுகாதார  பாதுகாப்பு நடைமுறையில் பேணுவதற்குரிய குளிரூட்டி வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்ததால் 54 சடலங்களையும் உரிய முறையில் பேணுவதில் பாரிய நெருக்கடிகளை  எதிர்நோக்கினோம்.  எனவே மாகாணத்திற்கு வெளியே உள்ள மின் தகன சாலைகளுக்கு சடலங்களை அனுப்பவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.
எமது வேண்டுகோளிற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய  அறிவுறுத்தலுக்கு அமைய, கௌரவ வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் முயற்சிகளின் பலனாக வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த உடலங்களை மின்தகனம் செய்வதற்குரிய  அனுமதி கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் இன்று வரை 95 சடலங்கள் மேற்படி மாகாணங்களில் மின் தகனத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இதில் 79 சடலங்கள் வடமத்திய மாகாணத்திற்கும் 16 சடலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 45 சடலங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 28 சடலங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 14 சடலங்களும் வவுனியா மாவட்டத்தில் இருந்து 8 சடலங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வேறு மாகாணங்களிற்கு மின் தகனத்திற்காக அனுப்பப்படும் சடலங்கள் உறவினர்களின் சம்மதத்துடனேயே அனுப்பி வைக்கப்படுகின்றன. மேற்படி சடலங்களை வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதற்கான வாகன மற்றும் பயண செலவினையும் சடலங்களை கொண்டு செல்வதற்கான பிரேத பெட்டிகளுக்கான செலவினங்களையும்  சில நன்கொடையாளர்களும், பொது அமைப்புக்களும் பொறுப்பெடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக வடமாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்புக்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படுவதை அவதானிக்க் கூடியதாக உள்ளது. எனவே கடந்த வாரத்தில் வெளி மாகாணங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
வட மாகாணத்தில்  ஏற்பட்ட இந்த நெருக்கடியான சூழ்நிலையில் எமக்கு கைகொடுத்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த இறுக்கமான சூழ்நிலையில் கோவிட் தொற்றிற்கு உள்ளான உடலங்களை வெளி மாகாணங்களிற்கு கொண்டு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் சார்பில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
,மின் தகனம் செய்வதற்குரிய வாகன ஒழுங்குகளை மேற்கொண்டும் மேலும்  பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய இராணுவத்தினர் மற்றும்; காவல்துறையினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இலங்கையின் பல மாவட்டங்களில் 3 முதல் 4 வரையான மின்தகன சாலைகள் காணப்படுகின்றன. ஆனால் வடமாகாணம் முழுவதற்கும் இரு மின்தகன சாலைகள் மட்டுமே இருக்கின்றன. எனவே மேலும் சில மின் தகன சாலைகளை அமைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமும் எதிர் காலத்தின் தேவையும் ஆகும். தற்போது வடமாகாணத்தில் உள்ள சில உள்ளுராட்சி மன்றங்கள் மின்தகன சாலைகளை அமைப்பதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
எனவே காலத்தின் தேவையை உணர்ந்து இயன்றளவு விரைவில் வடமாகாணத்திற்கு தேவையான  மின்தகன சாலைகளை அமைக்க சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவோம் எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்