மாணவர்களுக்கு வீட்டுத் தோட்ட விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் ப.தர்மகுமாரன்
மாணவர்கள் மத்தியில் வீட்டுத்தோட்டம் பற்றிய விழிப்புணர்வை பாடசாலைகளில் சுகாதார கழகங்கள் முன்னெடுக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசியசங்க தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களை பட்டினி நிலைக்கு கொண்டு செல்வதுடன் வறுமைவாட்டப் போகின்றது. அதில் இருந்து விடுபடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை பாடசாலை சுகாதார கழகம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
இதில் உணவு உற்பத்தி மற்றும் போசணை மட்டத்தைப் பேணுதல் பற்றி அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். உணவு உற்பத்தி பற்றி எல்லோருமே பேசுகின்றனர். போசணை மட்டத்தை பேணுவது தொடர்பாக விழிப்பு போதுமானதாக இல்லை. இதனை உடற்கல்வி ஆசிரியர்கள் பொறுப்புடன் செயலாற்ற முனைய வேண்டும். ஏனெனில் மரக்கறி விதைகளை கொடுத்து பஞ்சத்தை போக்கமுடியாது. அதனுடன் சிறுதானிய உற்பத்தி, பனையின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய உப உணவுகளை உற்பத்தி செய்தல், உணவுகளை சேமித்து வைத்தல், உணவை வீணடிக்காது பாதுகாத்தல், கால்நடைகளில் இருந்து பயன் பெறல் மற்றும் பசளைகளை கையாளும் முறை என்பவற்றை தெளிவாக மாணவர்களுக்கு ஊட்டுவதுடன் இன்றைய நிலையில் நாம் எலோரும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தயார்ப்படுத்தி சவால் நிறைந்த சூழலுக்கு எம்மை இட்டுச்செல்ல வேண்டும். அதற்கான முன்னாயத்ததை மாணவர்களின் மூலம் கொண்டு சென்றால் இலக்கை அடைய முடியும். ஏனெனில் விரைவுணவுக்கும் உடனடி உணவுக்கும் மேலைத்தேய உணவுக்கும் அடிமையான இனத்தை பாரம்பரிய கலாச்சார உணவுபழக்கத்திற்கு மாற்றி நம்பிக்கையுடன் நம்மையும் நம் இனத்தையும் பட்டினியில் இருந்து விடுபட சுயபொருளாதார உற்பத்திக்கு சுகாதார கழகம் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.