பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முன்மாதிரியான செயற்பாடு
“ஐயம் இட்டுண்” செயற்றிட்டத்தின் கீழ் முரளீதரன் குடும்பத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொவிட் 19 சிகிச்சை பிரிவிற்கு 20 – Portable Pulse Oximeter வழங்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு முன்மாதிரியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அனைத்து விடுதிகளிலும் அனுமதிக்கப்படுகின்ற பொருளாதார ரீதியில் நலிவுற்ற நோயாளர்களிற்கு, வைத்தியசாலை நிர்வாகத்தின் அனுமதியோடு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருட்கள் அடங்கிய பொதி நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொவிட் 19 நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கலந்து கொண்டு
நான்கு நோயாளர்களிற்கு வழங்கி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
வைத்தியசாலை உணவு வழங்கலுக்கு மேலதிகமாக , விசேட போசாக்கு உணவுத் தேவையுடையோருக்காக மேலதிக போசாக்குணவுகளும், தேவையேற்படும் வேளையில் நோயாளரை பராமரிப்பவரிற்கான உணவும் “ஐயம் இட்டுண்” அமைப்பினரால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.