கோல் மழை பொழிந்து மகாஜன கல்லூரி சம்பியன்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி கோல் மழை பொழிந்து சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று வியாழக்கிழமை நகுலேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணியை எதிர்த்து புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி வீராங்கனைகளான கிருஷாந்தி 3 கோல்களையும், யோகிதா ஒரு கோல்களையும் போட்டு தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி 4:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்திலும் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி வீராங்கனைகளான கிருஷாந்தி 2 கோல்களையும், யதுஷா ஒரு கோலையும் போட ஆட்ட நேர முடிவில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை புங்குடுதீவு சிறிய புஸ்பம் கன்னியர் மடம் மகா வித்தியாலய அணி பெற்றது.