தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொக்குவிலில் உள்ள சட்டத்தரணி மணிவண்ணனின் வீட்டுக்கு இன்று சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சில ஆவணங்களைக் காண்பித்து சுமார் 30 நிமிடங்கள் குறிப்பெடுத்துச் சென்றுள்ளனர்.
மாவீரர் தினம் அனுசரித்தமை தொடர்பில் ஒளிப்படம் ஒன்றைக் காண்பித்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அந்த ஒளிப்படத்தை முன்வைத்து நபர் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை உறுதி செய்யும் வகையில் விசாரிப்பதற்கே வந்ததாகவும் கூறியதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
எனினும் அது பழைய ஒளிப்படமாக உள்ளதால் தனக்கு நினைவில் இல்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் தாம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.