வருடத்திற்கு இரு தடவை குருதி அமுக்க பரிசோதனை
40 வயதைத் தாண்டியவர்கள் வருடத்தில் இரண்டு தடவைகளாவது தங்களுடைய குருதி அமுக்கத்தை ( Pressure ) அளந்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான அதிகரித்த உயர் குருதி அமுக்கம் / அழுத்தம் மூளையில் இரத்தப் பெருக்கு, மாரடைப்பு, நீண்டநாள் சிறுநீரக செயலிழப்பு மற்றும் பல உடல் வியாதிகளை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இதுதவிர ஏற்கனவே குருதி முகத்திற்கு மருந்துகளை உட்கொள்பவர்கள் அவற்றை கிரமமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் திடீரென மேற்படி மருந்துகளை உட்கொள்ளாத சந்தர்ப்பத்தில் திடீரென அதிகரித்த உயர் குருதி அமுக்கத்தினால் பாரிய விளைவுகள் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட நிகழ்கின்றன. எனவே எமது பகுதிகளில் இருக்கின்ற அனைவரும் குருதி அமுக்கத்தை தங்களுக்கு அருகில் இருக்கின்ற வைத்திய நிலையம் ஒன்றில் பரிசோதித்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.