வடமராட்சி பெற்றோல் நிலையங்களை பரிசோதியுங்கள் – மக்கள் வேண்டுகோள்
வடமராட்சிப் பகுதியில் இயங்கும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கும் பெற்றோல் நிலையங்களின் எரிபொருட்களின் தரங்களை பரிசோதிக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வடமராட்சிப் பகுதியில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கும் பெற்றோல் நிலையங்களில் வாகனங்களுக்கான பெற்றோல் நிரப்பிய பின்னர் வாகனங்களை குறிப்பிட்ட கிலோமீட்டருக்கு மேல் செலுத்த முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் தரங்கள் குறைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருளின் தரம் குறித்து சோதனைகளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது. எரிபொருள் நிலையங்களில் பெற்றோலில் தண்ணீர், மண்ணெண்ணெய் மற்றும் பிற திரவங்கள் கலப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளன எனவும் உரிய வழிகாட்டுதல்களை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் காஞ்சனா விஜேசேகர குறிப்பிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் வடமராட்சி பகுதியில் மக்களின் தேவைக்கேற்ப எரிபொருள் வழங்கப்படாமையால் தொடர்ந்தும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் கவனம் செலுத்தி வடமராட்சி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையை மேற்கொள்கின்றனவா எனவும் ஆராயுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.