வடமராட்சி நாவலடி பகுதியில் தொடரும் பதற்ற நிலை
வடமராட்சி அல்வாய் பகுதியில் இன்று இரவு பொலீஸார் துப்பாக்கி ஆயுதங்களுடன் நடமாடியதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதிகளில் காவல் கடமைகளில் பருத்தித்துறை பொலீஸார் ஈடுபட்ட போது அல்வாய் நாவலடி பகுதியில் ரெளடி கும்பலால் பொலீஸ் வாகனம் சேதமாக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட பொலீஸார் இன்று திங்கட்கிழமை காலை குறித்த பகுதிக்கு விரைந்து பொலீஸ் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்ய முற்பட்ட போது, குறித்த நபர் தப்பிக்க முயன்றதுடன் பொலீஸார் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனையடுத்து பொலீஸ் பிரிவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஒருவர் காலில் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் அல்வாய் நாவலடி பகுதியைச் சேர்ந்த அருமைராசா சிந்துஜன் (வயது 27) எனத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மேலதிக நபர்களை கைது செய்வதற்காக திக்கம் பகுதியில் இருந்து நாவடி வீதியூடாக பொலீஸார் துப்பாக்கிகளுடன் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதனால் சிறிது நேரம் பதற்ற நிலை உருவாகியுள்ளது.