வடமராட்சியில் அதிபர், ஆசிரியர், மாணவிகளுக்கு தொற்று
வடமராட்சியில் அதிபர், ஆசிரியர் மாணவிகள், என கல்விச் சமூகத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி விக்னேஸ்வரா ஆரம்பப் பாடசாலை அதிபருக்கும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் அவரின் இருபிள்ளைகளுக்கும், தேவரையாளி இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் என பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல பாடசாலைகள் வகுப்பறைகளின் இடவசதி மற்றும் சமூக இடைவெளிகளை கருத்தில் கொள்ளாது அனைத்து மாணவர்களையும் அழைத்து வகுப்புக்களை நடாத்துவதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் காலைப் பிரார்த்தனையில் மாணவர்களை மகிழ்வூட்டும் செயற்பாட்டில் ஈடுபடுமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பாடசாலைகளில் மாணவர்களை சமூக இடைவெளிகளைப் பேணாது, சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது மாணவர்களை வாய்விட்டு பெரிதாக சிரிப்பதற்காக முகக் கலசங்களை அகற்றி மாணவர்களின் சுவாசம் ஏனையோருக்கும் பரவக் கூடிய வகையில் காலைப் பிரார்த்தனையை நடாத்தி வருவதாகவும் பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். அத்துடன் குறித்த பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு தொடர்ந்தும் இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.