Fri. May 17th, 2024

மேஷ ராசியினருக்கு 2024 யோகம் உள்ள ஆண்டு

தலைமைப் பண்பு நிறைந்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த புதிய வருடத்தின் கிரக நிலவரங்கள் மேஷ ராசிக்கு நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். நீண்ட கால திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். கவுரவப் பதவிகள் தேடி வரும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் உங்கள் கையில் தாராளமாக புழங்கும். லௌகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களும் வந்து சேரும்.

குருவின் சஞ்சார பலன்கள்

ஆண்டின் துவக்கத்தில் ஜென்ம குருவாக ராசியில் நின்று 5,9-ம் இடங்களை பார்வையிடும் குருவால் அதிர்ஷ்டம் அரவணைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். அரசு வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும். அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ற அரசின் ஆதரவு கிடைக்கும்.

குரு பகவான் ஏப்ரல் 21, 2024 க்குப் பிறகு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்குச் செல்கிறார்.குருவின் பார்வை 6-ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலும் 8ம்மிடமான ஆயுள் ஸ்தானத்தையும் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.தாராள தனவரவால் குடும்பத்திற்கு குதூகலத்தை வழங்க உள்ளார். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்களை நடத்தப் போகிறார்.

உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். விரும்பிய மாற்றத்தை தரும் குருப்பெயர்ச்சி இதுவாகும். பட்ட கடனும் ,நோயும் தீரும் காலம் வந்துவிட்டது. வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். ஆயுள் சார்ந்த பயம் விலகும். உடம்பும் மனதும் புத்துணர்ச்சியடையும்.

சனியின் சஞ்சார பலன்கள்

ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று பல்வேறு விதமான லாபங்களை வழங்கப் போகிறார். ராசி, 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், 8ம்மிடம் எனும் ஆயுள் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். ஏப்ரல் 21 வரை ராசியில் உள்ள குருவை பார்ப்பதால் சில சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புகழ் அந்தஸ்து கவுரவம் கிடைக்கும். சிறிய முயற்சியில் பெரிய தடைகள் தகறும்.

பூர்வீகம் சொத்து தொடர்பான மன சஞ்சலம் தீரும் காலம் வந்து விட்டது. கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். பங்குச் சந்தை ஆதாயம் அதிர்ஷ்ட பொருள் வரவு மனதை மகிழ்விக்கும். தொழில் முயற்சிக்கு ஏற்ற லாபம் நிச்சயம் உண்டு. புதிய எதிர்பாலின நட்பால் சில அசவுகரியம் உண்டாகலாம்.புதிய முயற்சிகள் திட்டங்கள் பலிதாகும். ஆயுள் ஆரோக்கியம் பற்றிய பயம் அகலும். புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏற்படும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். வழக்கு விசாரணையில் தீர்ப்பு சாதகமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்

விரய ராகு மற்றும் 6ம்மிடக் கேதுவால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகலாம். பலருக்கு வெளிநாட்டு வாழ்க்கையால் இழந்த இன்பங்கள் மீளும்.வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் திறமைக்கு பாராட்டும் நல்ல மதிப்பும் கிடைக்கும் முறையான உடல் ஆரோக்கியத்தை காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். குறைந்த வட்டிக்கு நீண்ட காலத் தவணையில் கடன் கிடைக்கும்.

பிறருக்கு பரிதாபப்பட்டு ஜாமீன் போடக்கூடாது. எதிர்பாராத சில விரயங்கள் ஏற்பட்டாலும் தன குருவால் காப்பாற்றப்படுவீர்கள்.லாப ஸ்தான சனி பகவான் புதிய தொழில் முதலீட்டிற்கு தூண்டினாலும் ராகு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப தொழிலில் அகலக் கால் வைப்பது நன்று. பேராசையின் காரணமாக தவறான செயலில் ஈடுபடாத வரை ராகு கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

அசுவினி

மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும்.தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும்.வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள்.

பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும். உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

பரணி

தலைமைப்பதவி தேடி வரும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை.மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும்அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும். பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

சிலருக்கு கடல் கடந்த வேலை செய்யும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள். சுருக்கமாக அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும். தினமும் கருடாழ்வாரை மனதார வழிபட வம்பு, வழக்குகளிலிருந்து மீள்வீர்கள்.

கிருத்திகை 1

சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும்.பிள்ளைகளின் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவீர்கள். சுபசெலவிற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். வயது முதிர்ந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.சிவனுக்கு பசும் பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

திருமணம்

ராசிக்கு 7ல் கேது இருந்த போது திருமணத் தடையை சந்தித்தவர்களுக்கு கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால்திருமணத் தடை அகலும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும்.

பெண்கள்

பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் வருடமாகும். சுய தொழில் புரியும் பெண்களின் திறமை வெளிநாடு வரை பரவும்.குடும்ப பிரச்சனைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும் அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும்.செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும்.

வியாபாரிகள்

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். பெரிய தொகையை கடன் பெற்று அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டு வணிகம், உணவுப் பொருட்கள் ,ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் நல்ல பலன் தரும். வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு , வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. உங்கள் அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்

ராகு கேதுக்கள் மறைவு ஸ்தானம் செல்வதால் அரசியல் பிரமுகர்கள் சமூக சேவைக்காக அதிக அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும். 6ம்மிடமான உப ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களை புகழ் பெறச் செய்வார்.இதுவரை கட்சிக்காக உழைத்த உழைப்பிற்கு பலன் தரும் நேரம் துவங்கி விட்டது. கட்சி மேலிடம் உங்களின் சீரிய பணிக்குத் தகுந்த அந்தஸ்தான பதவியில் உட்கார வைத்து அழகு பார்க்கும்.

பரிகாரம்:

வெற்றிலை, பாக்குடன் மஞ்சள் நிற மைசூர்பாகு, ஜாங்கிரி வைத்து வியாழக்கிழமை இஷ்ட குலதெய்வம், குரு, தட்சிணாமூர்த்தி, மகான் சித்தர் ரிஷிகள் ஜீவசமாதியை வழிப்பட்டால் கர்மவினை சாபம் நீங்கி நன்மை உண்டாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்