பல்கலைக்கழகங்களுக்கு துறைசார்ந்து விண்ணப்பிக்க ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் – ப.தர்மகுமாரன்
க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த அனைவரையும் பல்கலைகழத்திற்கு துறைசார்ந்து விண்ணப்பிக்க ஆசிரியர்கள் வழிப்படுத்த வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். 2021ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலை கழத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன இதற்கு சித்தி அடைந்த அனைத்து மாணவர்களையும் துறைசார்ந்து பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் சிறந்த முறையில் வழிப்படுத்த வேண்டும் ஏனெனில் புதிய புதிய பாடகற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்திற்கு வெட்டுப்புள்ளியின் அடிப்படையிலும் பொது அறிவு பரீட்சையின் அடிப்படையிலும் க.பொ.த சாதாரணதர பாடங்களின் தெரிவை அடிப்படையாக கொண்டும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் எமது மாணவர்கள் பரீட்சை எழுதி தெரிவு செய்யும் கற்கைநெறிகளையும் க.பொ.த சாதாரண பாடத்தெரிவின் மூலம் தெரிவு செய்யும் கற்கை நெறிகளுக்கும் விண்ணப்பிக்க தவறுகின்றனர். இதனால் மாணவர்களின் பட்டம் பெறும் கனவு கானல்நீர் போலாவதுடன் துறைசார்ந்தவர்களையும் இழக்கின்றோம். இதுமட்டுமல்லாது அரச பல்கலைக்கழகத்தில் பட்டத்தை பெறாது அதிக பணத்தை செலவு செய்து தனியார் நிறுவனத்தில் பட்டத்தை பெற்று அங்கீகாரம் இல்லாது உளநெருக்கீட்டுக்கு உள்ளாகின்றனர். இலங்கை பல்கலைகழகங்களில் கற்கை நெறியை தொடர்வதற்கான தகுதி இருந்தும் விண்ணப்பிப்பதில் அசமந்தமாகவும் துறைசார்ந்த பாடத்தெரிவுகளை சரியாக தெரிவு செய்யாமையும் வெளிமாகாண பல்கலைகழகத்தை தவிர்த்துவருவதும் பாரிய பிரச்சனையாகும். இதனைக் கருத்தில் கொண்டு பாடசாலை நிர்வாகம் துறைசார்ந்த ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க ஆலோசனை வழங்கி வழிப்படுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் வினயமாக கேட்டுள்ளார்.