ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் போலி அறிக்கை
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள போலி அறிவிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உலகில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள நிதி சிக்கல்களை நிவர்த்திக்கும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்து குறித்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வங்கிக் கணக்கிலங்களும் கோரப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு போலியானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இவ்வாறான போலித் தகவல்களின் பின்னணியில் அரசியல் குழுவொன்றே இயங்கி வருவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த போலி அறிவிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.