சுதந்திர கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் அதிக செல்வாக்கு இருந்ததனாலேயே ஐக்கிய தேசிய கட்சி போரை தொடங்கியது, உடுபிட்டியில் நாமல்
போர் தொடங்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சுதந்திர கட்சிக்கு அதிக ஆதரவு இருந்தது. யாழ்ப்பாண மக்களும் இடதுசாரி கொள்கை உடையவர்களே. இதனால் தான் ஐக்கிய தேசிய கட்சி தனது சுயலாப அரசியல் நோக்கம் கருதி இந்த போரை ஆரம்பித்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடுளுமன்ற உறுப்பினர் அங்கயன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூடத்தில் பேசும்பொழுதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு முண்டு கொடுக்கும் தமிழ் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை.
நாங்கள் வடக்கிலொன்று தெற்கில் ஒன்று கூறுபவர்கள் அல்லர். எங்களுக்கு வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு எல்லாம் ஒன்றுதான். நாங்கள் எல்லோரும் இலங்கையர்களே. மஹிந்த ராஜபக்ச செய்வதை தான் சொல்லுவார், செய்ய முடியாததை பொய்வாக்குறுதி தர மாட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் உங்களின் பிரச்சினை எல்லாவற்றையும் தீர்த்துவைப்போம். மஹிந்த ராஜபக்ச உங்களிடம் கேட்பது ஒன்றே, அவர் ஆதரவு கொடுக்கும் கோத்தபாய ராஜபக்சவை எல்லோரும் சேர்ந்து ஜனாதிபதி ஆக்குவோம் என்று கூறினார்