சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய பாடசாலைகளில் இரண்டாம் தவணை ஆரம்பம்
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், கண்காணிப்பு மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் உள்ளிட்ட அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.