கொடிகாமம் 21 உட்பட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று யாழ் மாவட்டத்தில் 37 பேர் உட்பட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று 824 பேருக்கான மாதிரி பரிசோதனையில் யாழ் மாவட்டத்தில் 37, கிளிநொச்சி மாவட்டத்தில் 3, வவுனியா மாவட்டத்தில் 3 என 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார பிரிவில் கொடிகாமம் சந்தை வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் 21 பேருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட இருவருக்கும், யாழ் சிறைச்சாலையில் 8 பேருக்கும், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பிரிவில் மூவருக்கும், வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் சுகாதார பிரிவில் இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.