கட்டுத்துவக்கு வெடித்து சிறுவன் சாவு!! -கைதானவர்களுக்கு நீதிமன்றம் அதிரடி கட்டளை-
மட்டக்களப்பு கித்துள் வனப்பகுதிக்குள் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் சாவடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை ஒக்ரோபெர் 11அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 6.40 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கித்துள் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தன் தனு (வயது 14 ) என்ற சிறுவன் பலியாகியிருந்தார்.
இச்சம்பவத்தோடு தொடர்புபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு சிறுவன் உட்பட மூவர் கரடியனாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கித்துள் கிராமத்தைச் சேர்ந்தவர்களான சௌந்தரராஜன் இந்துஜன் (வயது 13), களுமாத்தையா கலாரூபன் (வயது 21), கிருஸ்ணபிள்ளை உதயகுமார் (வயது 25) ஆகியோரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இம்மூவரும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி. தியாகேஸ்வரன் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிறுத்தப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு நீதிவானால் பிறப்பிக்கப்பட்டது.