ஐயாயிரம் கொடுப்பனவை புறக்கணியுங்கள் – ப.தர்மகுமாரன் தெரிவிப்பு
ஆசிரியர்களின் உயரிய தனித்துவத்தை சிதைக்கவே ஐந்தாயிரம் கொடுப்பனவு வழங்கப்படுவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதிபர்கள் ஆசிரியர்களின் போராட்டம் சோரம்போகாது வலுவாக உரிமையை மையமாக கொண்டு உறுதியாக பயணிப்பதை சிதைப்பதற்கு கீழ்தரமான சிந்தனையாக ஐந்தாயிரம் கொடுப்பனவு என கொச்சைப்படுத்த முயலுகின்றது. இது இன்றைய ஆட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது குருவானவர்களை அவமதிக்கும் செயலாகும். ஏனெனில் ஆசிரியத்துவம் ஒரு நாட்டின் எழுத்தறிவினை உயர்த்தி நாட்டிற்கு தேவையான துறைசார்ந்தவர்களை உருவாக்குவதுடன் உன்னதமான உண்மையான உயர்ந்த நற்பிரஜைகளை வளர்த்து வரும் ஆசிரியர்களுக்கு நாய்க்கு எலும்புதுண்டை போடுவது போல ஐந்தாயிரத்தைக் காட்டி அதிபர்கள் ஆசிரியர்களை அவமானபடுத்தியுள்ளது. இது போராட்டத்தை மேலும் வலுவான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. ஒற்றுமையே பலம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. எனவே பல பாடசாலைகள் ஐந்தாயிரத்தை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளன. ஏனையவர்களும் புறக்கணிக்கும் முடிவை விரைவாக எடுத்து ஆசிரியத்துவத்தின் உயர்ந்த பண்பை அரசுக்கு வெளிப்படுத்த வேண்டும் மாறாக பணத்தைப்பெற்று அடிமைகள் என நிரூபித்து விடாதீர்கள். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. எல்லோரும் ஒரணியில் திரண்டு உரிமையை வென்றெடுப்போம் ஆசிரியர்கள் யார் என்பதை நிரூபிக்கும் தருணம் இது. கறைபடிந்தவர்கள் என்ற வரலாற்றை உருவாக்கிவிடாது மாணவர்களிடம் உயர்ந்து நிற்க வேண்டுமானால் உரிமையை வென்றெடுக்க வேண்டும். இல்லையேல் வரலாற்றில் ஆசிரியர்கள் கையாலாகாதவர்கள் என்ற அவப்பெயர் நினைவுஅழியாது இருக்கும் என சங்க தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்