Mon. May 20th, 2024

இனப்படுகொலைக்கான நீதியை பெற பிரான்ஸ் துணை நிற்க வேண்டும்- மணிவண்ணன்

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை பெற்றுத் தருவதற்கு பிரான்ஸ் துணை நிற்கவேண்டும் என்று யாழ் மாநகர  முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் சென்றுள்ள யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலமையிலான குழுவுக்கும்  பிரான்ஸ்  பாராளுமன்ற உறுப்பினரும், பிரெஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவை சந்தித்து இன்று  உரையாடும்போதே மணிவண்ணன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் கருத்து தெரிவித்த யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நாங்கள் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்,  ஒன்று தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினைப் பெற்றுதருவதற்கு பிரான்ஸ் துணை நிற்கவேண்டும் என்றும் 30 வருட போரின் காரணமாக அழிக்கப்பட்ட எமது பிரதேசங்களை மீள  கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை  வழங்கவேண்டும் என்றும் கேட்டு கொண்டதுடன்
தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புக்கள், தமிழருக்கு நீதியான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய,  சமஸ்டி முறையிலான, ஆட்சி அதிகாரத்தினை சிறிலங்காக அரசு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் நிதி உதவிகளை அளிக்கவேண்டும் என்றும்,  அதற்கான அழுத்தங்களை பிரான்ஸ்  பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பிரஞ் பாராளுமன்ற செயலாளார் ஜோன்ஸ் பிரான்சுவா நாங்கள் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொள்ளுகின்றோம். பிரரான்சில் உள்ள பல மாநகர சபைகள் இனப்படுகொலைத் தீர்மானங்களை நிறைவேற்றி அதனை எமக்கு அறியத்தந்திருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் தற்பேர்து தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு இலங்கையில் ஒரு நீதியான அரசியல் தீர்வைப்பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் பாராளுமன்றம் தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்மக்களின் அரசியல் பொருளாதார சமூக மேம்பாடுகள் மற்றும் மாநகர சபையின் செயற்பாடுகள்,  தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரஞ் பாராளுமன்ற செயலாளார் ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கு யாழ்.மாநகர சபையின் சார்பில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவா, யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்