இடர்படும் ஆசிரியர்கள் பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்துங்கள் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
எரிபொருள் தட்டுப்பாடான ஆசிரியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் வாரத்தில் 5 நாட்களும் நடைபெறுகின்றன. இதனால் பல கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்து பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கு கியூஆர் முறையிலான பெற்றோல் பெறும் திட்டம் போதாமல் உள்ளதாக ஆசிரியர்களினால் கருத்து வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இன்னமும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. இதனால் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் நாட்டு நிலைமையைக் கருத்தில் கொண்டு கியூஆர் முறையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதோடு பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்தி கடமைகளை நிறைவேற்றுமாறும் அவர் தெரிவித்தார்.